வழக்கமாக கதாநாயகிகளாக நடிக்கும் நடிகைகள் பிற படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடுவார்கள். ஆனால், பிரபல நடிகர் ஒருவர் இன்னொரு பிரபல நடிகரின் படத்தில் நடனமாடி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்த உள்ளார். தமிழ் சினிமாவில் எப்போதாவது நடிக்கும் அதிசயங்களில் இதுவும் ஒன்று. அந்த நடிகர் வேறு யாருமில்லை நடிகர் சிலம்பரசன்தான். அவர் சிறப்பு நடனம் ஆடவுள்ள படம் தலை அஜீத்தின் அசல்.
சிம்பு சமீப காலமாக தீவிர அஜீத் ரசிகராகி விட்டார். தனது படம் ஒன்றில் அஜீத் ரசிகராகவே அவர் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அஜீத்துடன் இணைந்து ஒரு படத்தில் தலை காட்டுகிறார்.
சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து வரும் படம் அசல். அஜீத் நாயகன். இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு அஜீத்துடன் இணைந்து ஆடுகிறாராம் சிம்பு. படத்தின் ஹைலைட்டாக இந்தப் பாடல் இருக்குமாம். ஏற்கனவே சில ஹீரோக்களுக்காக பாடல்கள் பாடியுள்ளார் சிம்பு. ஆனால் தற்போதுதான் இன்னொரு முன்னணி ஹீரோவுடன் இணைந்து திரையில் தோன்றுகிறார்.
அதேபோல தனது நண்பரான எஸ்.ஜே.சூர்யா தெலுங்கில் இயக்கி வரும் புலி படத்தில், சூர்யாவின் கோரிக்கைக்கேற்ப ஒரு பாடலுக்கு ஆடியுள்ளாராம் சிம்பு. படத்தின் நாயகன் பவன் கல்யாணுடன் இணைந்து இந்த பாடலில் ஆடுகிறாராம் சிம்பு.
இந்த புலி படத்திற்கு இன்னொரு பின்னணிக் கதை உள்ளது. முதலில் இதை தமிழில் விஜய்யை வைத்துத்தான் இயக்குவதாக இருந்தார் சூர்யா. விஜய்யும் சம்மதித்து எல்லாம் ரெடியான நிலையில் திடீரென நடிக்க மறுத்து விட்டார் விஜய்.
என்ன காரணம் என்று அப்போது கூறப்பட்டது என்றால் - புலி கதையில் சிம்புவின் ஆலோசனையின் பேரில் பல மாற்றங்களை செய்தி ருந்தார் எஸ்.ஜே.சூர்யா . இதனால் அப்செட் ஆன விஜய் புலிக்கு கும்பிடு போட்டு விட்டாராம்.



குடியரசு தினத்தில் அசல் படம் ரீலிஸ் ஆகவுள்ளது. அஜித் - பாவனா நடிக்கும் புதிய படம் அசல். சிவாஜி புரொடக்ஷன் தயாரித்து வரும் இப்படத்தின் சூட்டிங் முடித்துவிட்ட நிலையில் பாடல் காட்சிக்காக வெளிநாடு செல்லவிருக்கிறார்கள்.
இந்தப் பொங்கலை அஜித்தின் அசலுடன் ‘தல’ப் பொங்கலாக கொண்டாடலாம் என்றிருந்த அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றம் காத்திருக்கிறது. பொங்கலுக்கு அசல் வெளியாகவில்லை என்று கசிந்திருக்கும் செய்திதான் இந்த ஏமாற்றத்துக்கு காரணம்.
சரண், அஜித், பரத்வாஜ் காம்பினேஷனின் நான்காவது படம், அசல். பழி வாங்கும் கதையான இதில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கிறார் அஜித். அவருக்கு ஜோடி சமீராரெட்டி. படத்தில் பாவனாவும் உண்டு. அஜித்துடன் இரண்டு பாடல்கள் இருப்பதால் நான்தான் நாயகி என கூறி வருகிறார் பாவனா.
சிவாஜி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டன. படத்தை பொங்கலுக்கு வெளியிட வேண்டும் என்பதே அனைவரின் எண்ணம். தற்போது அதில் சின்ன மாற்றம்.
பொங்கலுக்குப் பதில் ஜனவரி 26 குடியரசு தினத்தில் படத்தை வெளியிடலாம் என தயாரிப்பாளர்கள் தரப்பில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறதாம். இரண்டு பாடல் காட்சிகள் மற்றும் சில டாக்கி போர்ஷன்கள் முடிக்கப்பட வேண்டியிருப்பதால் இந்த தாமதம் என்று கூறப்படுகிறது.
கடைசி நேரத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய பொங்கலுக்கே படம் வந்தாலும் ஆச்சரியமில்லை.....












